26 மாணவர்கள் 9ஏ சித்தி! வரலாற்று சாதனை படைத்த பாடசாலை!!

645

2017ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொது தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நள்ளிரவில் இருந்து இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலையில் இருந்து 9ஏ சித்திகளை 26 மாணவர்களும், 8ஏ சித்திகளை 20 மாணவர்களும் பெற்றதுடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது கல்லூரியில் சென்ற முறை கால்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இம்முறை கல்லூரியின் வரலாற்றில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்று சாதனைகளை பெற்று எமது கல்லூரிக்கு பெருமை தேடித்தந்திருக்கின்றார்கள்.

இந்த பெறுபேறுகளுக்கு உழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் எமது கல்லூரி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் பெறுபேறுகள் கல்வித்திணைக்களத்தில் இருந்து கிடைத்தவுடன் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வினை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கல்முனை வலயத்தின் தமிழ்ப்பிரிவிற்கு பொறுப்பான கோட்டக்கல்வி அதிகாரி திரவியராஜா நேரில் வந்து கல்லூரி அதிபரை வாழ்த்தியதோடு மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.