வவுனியாவின் மோசமான நிலையில் வீதிகள் : பாரபட்சம் காட்டும் மத்திய மாகாண அமைச்சுக்கள்!!

732

ஒரு பிரதேசத்தின் அத்தியாவசிய உட்கட்டுமானங்களில் மிக முக்கியமானது வீதியாகும். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்வதில் தரமான வீதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

இந்தநிலையில் அண்மைக் காலமாக வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் கவனிப்பாரற்று கிடக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து செய்கின்ற வவுனியாவின் பல முக்கியமான வீதிகள் மக்களால் இனங்காட்டப்பட்டும், உரியவர்களுக்கு முறையிட்டும், போராட்டங்களை நடாத்தியும் எந்த முன்னேற்றமும் இன்றி காணப்படுகின்றது.

வவுனியா மன்னார் பிரதான வீதி, நெளுக்குளம் ஊடாக வீரபுரம் செல்லும் வீதி, பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வீதி, குழுமாட்டுச் சந்தியூடாக சுந்தரபுரம் செல்லும் வீதி, பிரமனாலங்குளம் பெரிய தம்பனை வீதி, கோவில்குள மூடாக சிதம்பரபுரம் செல்லும் வீதி, ஓமந்தை சேமமடு வீதி, உள்ளிட்ட மக்கள் பாவனை அதிகமுள்ள வீதிகள் அடங்கலாக வவுனியா மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் பயன்படுத்துகின்ற வீதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு ஒவ்வாத வீதிகளாகவே காணப்படுகின்றன.

யுத்த காலங்களை விட தற்போது தான் வீதிகளின் நிலை கேவலமாக உள்ளதாக மக்கள் விசனமடைந்துள்ளனர்.

இவ் வீதிகளில் ஒரு சில வீதிகளை தவிர ஏனைய பெரும்பாலானவை மாகாண அமைச்சுக்குள் வருவதனால் வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும் மத்திய அரசும் வவுனியா மாவட்டத்தை புறக்கணிக்கின்றனவா எனவும், இத் துறைசார் அமைச்சர்கள் வர இருக்கின்ற தேர்தல்களை கணக்கில் கொண்டு தமக்கு வாக்களிக்க கூடிய மக்கள் இருக்கின்ற தொகுதியின் அபிவிருத்தியில் மட்டும் கவனம் செலுத்துகின்றனரா என்ற ஐயப்பாடும் வவுனியா மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வடக்கின் மிக முக்கிய போக்குவரத்து மையமான வவுனியாவின் வீதிகள் சேதமடைந்து உள்ளமை வவுனியா மக்களுக்கு மட்டுமன்றி வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கும் சிரமத்தினை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக தினமும் மன்னார் நகரத்தில் இருந்தும் மன்னார் மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் இருந்தும் வவுனியாவிற்கு பயணம் செய்யும் ஆயிரக் கணக்கானவர்களும் இதனால் பாதிக்கப் படுகின்றனர்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு இந்த வீதிகளை துரிதகதியில் புனரமைக்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த உதவ வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.