வவுனியாவில் இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

589

வவுனியா மாவட்ட செலயகம் இராணுவத்தினருடன் இணைந்து நடாத்தும் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (09.04) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களால் 410 ஆவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்மையில் நியூஸ்ட் பெஸ்ட் ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தும் தமது பிள்ளைகளை தேடி தாம் 410 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட செயலகம், வர்த்தகர் சங்கம், பிரதேச செயலகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஒன்றிணைத்து இராணுவத்தினருடன் இணைந்து புதுவருடத்தையொட்டி களியாட்ட நிகழ்வு நடத்துவதை கண்டித்தும் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பாவனையை கட்டுப்படுத்தக்கோரியும் இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தாம் தமது பிள்ளைகளைத் தேடி ஒரு வருடத்தைக் கடந்தும் போரடிக் கொண்டிருக்கையில் தமது போராட்டத்திற்கு அருகில் இராணுவத்தினரால் களியாட்ட நிகழ்வு நடத்தப்படுவது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தம்மை மேலும் வேதனைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் களியாட்டத்திற்கு ஆதரவு வழங்குபவர்கள் தம்மையும் தமது தாயாக யோசிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.‌