தமிழகத்தில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கோவில் குருக்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் குருக்களாக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு ஞானபிரியா(24) என்ற மனைவி உள்ளார். இவர்கள் சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறையில் மோசமான காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலகணேஷ் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரின் கட்டை அவிழ்த்துவிட்டு, வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிரியா வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பாலகணேஷை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஞானபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஞான பிரியாவின் கழுத்தில் நகைகள் காணாமல் போயிருந்ததால், நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இருப்பினும் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகணேஷ் நினைவு திரும்பியவுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் பாலகணேஷ், நள்ளிரவில், கழிப்பறைக்கு செல்ல வெளியே வந்த போது, என்னை தாக்கிவிட்டு உள்ளே சென்ற இரண்டு நபர்கள், என் மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
ஆனால் பொலிசாருக்கு பாலகணேஷ் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பொலிசார் பாலகிருஷ்ணனிடம் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருமணமாகி முன்றாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால், பிரியா மிகுந்த மனக்கஷ்டத்தில் இருந்ததாக தெரிகிறது.
சம்பவ தினத்தன்று குழந்தை இல்லாதது குறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, அப்போது ‘நீ ஆண்மையற்றவன்’ என்று பாலகணேஷை ஞானப்பிரியா திட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலகணேஷ், நண்பர் மனோஜ் உதவியுடன் ஞானப்பிரியாவைக் சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து வீட்டின் வெளிப்புறம் தாழிட்டுவிட்டு, அதன் பின் தனது கை மற்றும் கால்களை குளியலறை அருகே வந்து கட்டி கொண்டு நாடகமாடியுள்ளார்.
நகைக்காக கொலை நடந்தது போன்று சித்தரிக்க மனோஜ், தங்க செயினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார், இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






