வவுனியா மகாறம்பைக்குளம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் 10, 11ஆம் தர மாணவர்களுக்கான தளபாட வசதிகள் இல்லாமையால் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக பாடசாலை சமூகத்தினர் மற்றும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாடசாலைச் சமூகத்தினர் தெரிவிக்கையில்,
வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் 11இல் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இவர்கள் முதலாம் தர (ஆரம்ப வகுப்பு) மாணவர்களுக்குரிய சிறிய இருக்கைகளில் அமர்ந்திருந்தே தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் நீண்ட நேரம் அமர்ந்திருந்து கல்வி கற்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது மாணவர்களின் உள ரீதியான பல பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துவிடும். .
இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு நாம் பல தடவைகள் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் இன்று வரை எமக்கான தளபாட வசதிகளை உரியவர்கள் செய்து தரவில்லை.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து மாணவர்களதும் பாடசாலையினதும் வளர்ச்சிக்குக் கைகொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.






