சிரியாவில் ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ தாக்குதலை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிரியா மீதான ரசாயன தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும், ரஷ்யாவும் தொடர்ந்து பனிப்போர் நடத்தி வருகின்றனர். சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்கும் வகையில் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும் தனது ஆதரவினை தொடர்ந்து சிரியாவுக்கு அளித்து வருகிறது. இதில் , கொடூரமான விடயம் என்னவென்றால் , டூமாவில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்கள் கொலைசெய்யப்படுவதுதான்.
கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் டூமா பகுதியில் சந்தேகிக்கும் விதமாக ரசாயன தாக்குதல் நடத்திய சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால், ரஷ்யாவிடமிருந்து ராணுவ ஆதரவை பெறும் சிரியா, ரசாயன தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.
சிரிய நகரான டூமாவில் கடந்த சனிக்கிழமை விஷம் வாயு தாக்குதல் நடத்தப்பட்டதில், 500 நபர்கள் நச்சு இரசாயனங்களால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், எதற்கும் தயாராக இருங்கள், ஏவுகணைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிரியா மக்கள் மீது நீங்கள் ரசாயன தாக்குதல் நடத்தவில்லை என்றால், அங்கு மக்களை கொன்றுகுவித்து அதனை பார்த்து சந்தோஷப்படுபவர்கள் யார்?
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மிக மோசமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலின் மூலம் அமெரிக்கா விழித்துக்கொண்டது, சிரியா மீது ரஷ்யா மேற்கொண்டுள்ளது கொடூரத்தாக்குதல்.
அமெரிக்காவிடமிருந்து ரஷ்யா பொருளாதார ரீதியான உதவியை எதிர்பார்க்கிறது. ரசாயன தாக்குதலுக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால், ரசாயன தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா கூறுவது முற்றிலும் பொய்யானது, தேவையற்ற கட்டுக்கதைகளை அமெரிக்கா பரப்புகிறது என ரஷ்யா தூதுவர் கூறியுள்ளார்.





