விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : மிதுனம்!!

617

மிதுன ராசி வாசகர்களே, எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களில் வல்லவர்கள் நீங்கள். உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய காலியிடத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்கத் திட்டமிடுவீர்கள்.

வி.ஐ.பி.க்களுடன் நெருக்கமாவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. சபையில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்விகச் சொத்தைச் சீர்படுத்துவீர்கள். வாகன வசதி பெருகும்.

ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் குடும்பத்திலும் வீண் குழப்பங்கள் வரும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களைத் தவறான பாதைக்குத் தூண்டுவார்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். குழந்தைகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன், வேலை அமையும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். வெளி நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொத்து வாங்கும் போது தாய்ப்பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை ராகு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் கேது நீடிப்பதாலும் அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். யதார்த்தமாகப் பேசுவதைக்கூடச் சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 13.2.2019 முதல் வருடம் முடியும்வரை ராசிக்குள்ளேயே ராகுவும் ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மின்சாரம், நெருப்பு இவற்றைக் கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி தலைசுற்றல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஈகோ பிரச்சினையைத் தவிர்ப்பது நல்லது. 02.01.2019 முதல் 29.01.2019 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீட்டிலும் கழிவு நீர்க் குழாய் அடைப்பு, குடிநீர்க் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சாதனப் பழுது வந்து நீங்கும்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் 8-ம் வீட்டிலேயே கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் இக்காலகட்டத்தில் நெருப்பு, மின்சாரச் சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர உத்திகளைக் கையாள்வீர்கள். கடையை விரிவுபடுத்துங்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் லாபம் கணிசமாக உயரும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிட்டும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவீர்கள். வேலையைத் தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள்.

இந்தப் புத்தாண்டு தன் கையே தனக்குதவி என்பதை உணர வைப்பதாக அமையும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், இடிகரை எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ரங்கநாயகி அம்மையாரையும் ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதரையும் சனிக்கிழமைகளில் துளசி மாலை சாற்றி வணங்குங்கள்.