விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : கடகம்!!

577


கடக ராசி வாசகர்களே, தொலைநோக்குச் சிந்தனையுடையவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.



வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். சொத்துப் பிரச்சினையில் வழக்கு, நீதிமன்றம் என்று போகாமல் சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.



ஆனால், 4.10.2018 முதல் 12.03.2019 வரை 5-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகளுக்குத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 6-ல் சென்று மறைவதால் சொத்துப் பிரச்சினைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும்.


இந்த வருடம் முழுவதும் சனி பகவான் 6-ல் நீடிப்பதால் உங்கள் கை ஓங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டம் விலகும்.

14.04.2018 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகு பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் கேது பகவானும் நிற்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு பிரச்சினைகள் வந்து செல்லும்.


ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும் கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகையெல்லாம் கைக்கு வரும். ஷேர் மூலம் பணம் வரும்.

நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். 30.04.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 7-ல் அமர்வதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு அவசியம்.

30.01.2019 முதல் 24.02.2019 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் சென்று மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு, கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சொந்த வாகனத்தில் அதிகாலைப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்யுங்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் சொந்த இடத்தில் கடையை மாற்ற முயல்வீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும்.


உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். உங்களின் நெடுநாள் கனவான சம்பள உயர்வு, பதவியுயர்வு வைகாசி, ஆவணி மாதங்களில் உண்டு. ஐப்பசி, மாசி மாதங்களில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும்.

இந்தப் புத்தாண்டு விரக்தியாக இருந்த உங்களை வெற்றிக் கனியைச் சுவைக்க வைப்பதுடன் அடுத்தடுத்து அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருமெய்ச்சூர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீலலிதாம்பிகையை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள்.