விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : விருச்சிகம்!!

770

விருச்சிக ராசி வாசகர்களே, தொடங்கிய வேலையை முடிக்கும்வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! சந்திரன் ராசிக்கு 5வது ராசியில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சொத்து வழக்குகள், பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குழந்தையின்மையால் வருந்திய தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். பிள்ளைகளால் தொல்லைகள் நீங்கி, உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உயர்கல்வியில் வெற்றிபெற்று உங்களைத் தலைநிமிரச் செய்வார்கள்.

உங்களின் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் ஆரவாரமில்லாமல் அமைதியாகச் சாதிப்பீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் நீங்கள் முடித்துக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள்.

பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எங்கே சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் ராசிக்கு 12ல் மறைவதால் திடீர் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள்.

திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் முன்கோபம் அதிகரிக்கும்.

உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 2ம் வீட்டில் அமர்வதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியினருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள்.

வருடம் பிறக்கும் 14.04.2018 முதல் 12.02.2019 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். கேது 3-ல் நிற்பதால் வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை ராகு 8-ல் நுழைவதால் சொந்தபந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியைச் சந்தேகப்பட்டுப் பேசாதீர்கள். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.

இந்த ஆண்டு முழுவதும் சனி 2-ல் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாக இருப்பதால் பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென்று தோன்றும். அவர்களின் முரட்டுத்தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுங்கள். கண், காது வலி வந்து செல்லும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதுபுதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து விற்பனை செய்யுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபமுண்டாகும்.

புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். அதையெல்லாம் நீங்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் கடமையைச் செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் அலைச்சலையும் அவமானத்தையும் தந்தாலும் மறுபக்கம் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்திலிருந்து பீளமேடு செல்லும் வழியில் அமர்ந்துள்ள அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.