விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : கும்பம்!!

615


கும்ப ராசி வாசகர்களே, நியாயமாகத் தனக்குக் கிடைக்க வேண்டியதைக்கூட சில நேரத்தில் விட்டுக் கொடுப்பவர் நீங்கள். உங்களின் சப்தமாதிபதி சூரியன் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்கும்.



வழக்கு சாதகமாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு சந்திரன் 2ல் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இங்கிதமாகப் பேசி முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தேடி வருவார்கள். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள்.



இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலை, அலுவலகம் என்றிருந்தீர்களே! இனிக் குடும்பத்துக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் இனிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் புகழும்படி நடந்துகொள்வீர்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.



ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால் யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் காசோலை தரவும். ஆனால், 13.03.2019 முதல் வருடம்முடியும் வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி லாப வீட்டில் வந்தமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்தப் புதுவழிகளில் முயல்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும்.


14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது பகவான் 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது லாப வீட்டுக்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும்.

திடீர் யோகம் உண்டு. மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பார்கள். ஆனால், ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால் சொந்தபந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குக் குடிபெயர்வீர்கள்.


இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் லாப வீட்டில் நிற்பதால் செயலில் வேகம் கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12-ல் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் சகோதரர்களால் ஆதாயமும் உண்டு.

09.06.2018 முதல் 04.07.2018 வரை சுக்கிரன், உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை வரும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைக்கும்படி சில அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். விளம்பர உத்தியால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவார்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி அவ்வப்போது விமர்சனங்களும் குறைகளும் வந்த வண்ணம் இருக்கும்.


ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பள உயர்வுடன் சலுகைகளும் உண்டு. கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

இந்த விளம்பி ஆண்டு ஒருபக்கம் அனுபவ அறிவையும் செலவையும் தந்தாலும், மற்றொரு பக்கம் திடீர் வருமானத்தையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.