கல்வீச்சுக்கு இலக்காகி ஒருவர் பலி : இருவர் படுகாயம்!!

515

 

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பலியான நபர் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் எனவும், அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய கே.பொன்னுசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றநிலையில், அதனை விலக்கச் சென்ற குறித்த நபர் மோதலில் ஈடுபட்டவர்களின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த நிலையில் அவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட குழுவில் மேலும் இருவர் காயமுற்ற நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.