யாழில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 7 பிள்ளைகளின் தாயார் எடுத்த தவறான முடிவு!!

340

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தாயார் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 57 வயதடைய சோதிலிங்கம் சாந்தகுமாரி என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் நேற்று முன்தினம் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட நிலையில் எரி காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவர் நீண்டகாலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அடிக்கடி தான் சாகப் போவதாக குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிக் கொண்டார். இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார் என திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.