வவுனியா நகரசபையினருடன் முஸ்லிம் வர்த்தகர்கள் முறுகல்!!

345

வவுனியா நகரசபை பொதுசுகாதார உத்தியோகத்தர்களுக்கும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அகற்றும் செயற்பாட்டில் குறித்த அதிகாரிகள் ஈடுபட்ட போதே இந்த முறுகல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை வவுனியா நகரசபையினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக இன்று (19.04.2018) வவுனியா குருமண்காட்டு பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய சட்டவிரோத வியாபார நிலையம் ஒன்றினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட நகரசபை பொதுசுகாதார உத்தியோகத்தர்கள், வரி பரிசோதகர்கள், நகர சபை ஊழியர்களின் செயற்பாட்டினை தடுக்கும் விதமாக அப்பகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் நடந்ததுடன், அவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவ்வர்த்தகர்கள் பிரதேசவாதத்தை ஏற்படுத்தும் வகையில் நகரசபை உத்தியோகத்தர்களுடன் பேசியமையால் அங்கு குழுமியிருந்த மக்களுக்கும் குறித்த முஸ்லிம் வர்த்தகர்களுக்குமிடையிலும் முறுகல் ஏற்பட்டுள்ளது.