அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து : ஒருவர் பலி, ஐவர் படுகாயம்!!

1012

 

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும், வான் ஒன்றும் மோதிகொண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், டிப்பரில் பயணம் செய்த மூவரும் வானில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் டிப்பரின் சாரதி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் ஓந்தாச்சிமடம் 36 வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த இராஜரெட்னம் தினேஸ்காந்த் என்ற 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.