இசை நிகழ்ச்சியில் திடீரென நடந்த அனர்த்தம் : ஒருவர் பலி, பலர் காயம்!!

579

நிட்டம்புவ அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அத்தனகல்ல விஹாரைக்கு அருகாமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளின் பின்னர், இரவு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதன்போது இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெய்யாந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்கள குத்து விளக்கு ஏற்றும் நிகழ்விலும் இந்த வர்த்தகர் பங்கேற்றிருந்தார். துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.