வவுனியா வைரவர் புளியங்குளம் குளத்தில் மலசலகூடக் கழிவுகள்!!

525

 

வவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் மலசல கூட கழிவுகள் குளத்தினுள் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வைரவர்புளியங்குளத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தில் புதிதாக மலசல கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த மலசல கூடத்தின் கழிவு செல்லும் குழியானது (பிட்) குளத்தின் எல்லைப்பகுதியில் காணப்படுவதுடன் அதன் கழிவுகள் குளத்து நீரில் சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் குளத்தை சுற்றியுள்ள வயல்களுக்கு கூட குறித்த கழிவு கலந்த நீரே செல்கிறது. இது குறித்து கமக்கார அமைப்பின் தலைவரை தொடர்புகொண்ட போது, தாம் அப்படியான ஒரு வேலையும் செய்யவில்லை என்றும் இது வீண் பழி என்று கூறியதுடன் ஆலய எல்லைக்குள்ளேயே தாம் மலசல கூடம் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் இது சம்பந்தமாக கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளரை அணுகிய பொழுது, குறித்த மலசல கூடம் குளத்தின் எல்லைக்குள் இருப்பதாகவும் இது நீரை மாசுபடுத்தும் ஒரு செயல் என்பதுடன் அதனை உடனடியாக அகற்றுமாறும் தவறும் பட்சத்தில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த கமக்கார அமைப்பின் தலைவரும் சம்பந்தப் பட்ட கோவிலின் தலைவர் ஒருவர் என்பதுடன் குறித்த நபர் நகர சபையின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-