இலங்கைத் தமிழர் கொலை : கனடாவிற்கு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்!!

834

கனடாவில் தொடர் கொலையாளி புரூஸ் மெக்ஆத்தரினால் இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் கொலை செய்யப்பட்டமையானது கனடாவில் புகலிடக் கோரிக்கை சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மனித உரிமை அமைப்புக்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர் கிருஸ்ணகுமார் கனகரட்னத்தின் மரணம், கனடாவின் புகலிட சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதற்கான கசப்பான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளதாக இந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர வதிவிட வசதியை அளித்திருந்தால் கிருஸ்ணகுமார் கொல்லப்பட சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது என்பதை அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

புகலிடக் கோரிக்கையாளர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செய்ட் ஹசன், கனடாவின் செய்தி இணையத்துக்கு வழங்கிய செவ்வியில் கிருஸ்ணகுமாரின் மரணம் புகலிடக் கோரிக்கையாளர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களை தொடர் கொலை செய்து வந்த புரூஸ் மெக்ஆத்தரின் இறுதி இலக்கு இலங்கைத் தமிழரான கிருஸ்ணகுமார் கனகரட்னம் என்ற செய்தி கடந்த வாரமே கனேடிய காவல்துறையினரால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.