திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு இந்து மயானத்திற்கு முன்னால் உள்ள வாய்க்காலில் மிதந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிவெட்டி பாரதிபுரத்தைச் சேர்ந்த குணசேகரம் மங்களதீபன் (வயது 30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாய்க்காலுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியொன்று கிடப்பதையும் வாய்க்காலில் சடலமொன்று மிதப்பதையும் வயலுக்குச் சென்றவர்கள் அவதானித்ததையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்தும், சடலத்தை மீட்ட மூதூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இளைஞனுக்கு வலிப்பு நோய் உள்ளதென அவரது தந்தை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், அந்த இளைஞர் வலிப்பு வந்து வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






