யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி : மற்றொருவர் கவலைக்கிடம்!!

1118

 

அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதோடு பிறிதொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்.தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் கட்டப்பிராயைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயரத்தினம் பிரசாத் என்ற இளைஞர் பலியாகியுள்ளதோடு, 27 வயதுடைய குணராசன் திருக்குமரன் என்ற இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.