13 வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற இலங்கைப் பெண் : காப்பாற்றுமாறு தாயார் கோரிக்கை!!

1213

 

13 வருடங்களுக்கு முன்னர் சவூதிக்கு வீட்டு வேலைக்கு சென்ற தனது மகளை மீட்டுத்தருமாறு ஹட்டன் – குடாகம பகுதியை சேர்ந்த தாயொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுப்பையா விக்னேஸ்வரி என்ற பெண் தனது 23ஆவது வயதில் கடந்த 2005.08.09 அன்று கொழும்பு தனியார் வெளிநாட்டு முகவர் நிலையத்தினூடாக சவூதி நாட்டிற்கு சென்றார். இவ்வாறு சென்ற தனது மகள் தொடர்பில் இது வரையில் எவ்வித தகவல்களும் இல்லை என தாயார் சிவலிங்கம் விஜயலட்சுமி கண்ணீருடன் தெரிவித்தார்.

தனது மகள் வெளிநாடு பயணமாகி ஆறு மாதங்களின் பின் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதன் பின் 8 வருடங்களின் பின்னரே அண்மையில் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, தான் பிரச்சினையில் உள்ளதாகவும் தான் தொழில் புரியும் இடத்தில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதால் வருட இறுதிக்குள் இலங்கைக்கு வருவதாகவும் தெரிவித்ததாக தாயார் தெரிவித்தார்.

வெளிநாடு சென்ற தனது சகோதரிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த நிலையில் கொழும்பில் அமைந்திருந்த குறித்த தனியார் வேலை வாய்ப்பு நிலையத்திற்கு சென்ற போது அங்கு அந்த வேலைவாய்ப்பு நிலையம் மூடப்பட்டிருந்ததாக வெளிநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் சகோதரர் சுப்பையா சுதாகர் தெரிவித்தார்.

அதன் பின்னர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்ற தனது மகளை பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு தாயாரான விஜயலட்சு மற்றும் சகோதரன் சுப்பையா சுதாகரன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.