இரண்டு மாதங்களுக்குமுன் காணாமல்போன பெண்ணின் கையைத் தூக்கிச் சென்ற நரி!!

320

 

தனது வாயில் ஒரு மனிதக் கையை கவ்வி வந்த ஒரு நரியைக் கண்டு பிரித்தானியாவின் கோவன் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே பகுதியிலுள்ள ஒரு தெருவில் மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிளாஸ்கோவைச் சேர்ந்த ஜூலி ரெய்லி(47) என்னும் பெண்மணி இரண்டு மாதங்களுக்குமுன் மாயமானர். பொலிசார் அவரைத் தேடி வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தின்பேரில் 41 வயதுள்ள ஒரு மனிதன் கைது செய்யப்பட்டான்.

கிடைத்த உடல் பாகங்கள் ஜூலியுடையதுதானா என்பதை பொலிசார் அறிவிக்கவில்லை. பொலிசார் தனது வீட்டருகே நிற்பதைக் கண்ட ஒரு பெண்மணி விசாரித்தபோது பொலிசார் மனித உடல் பாகங்கள் கிடப்பதாகக் கூறியதை அடுத்து அந்தப் பெண்மணி தனது வீட்டருகே ஏதாவது கிடக்கிறதா என தேடியிருக்கிறார்.

அப்போது அவரது வீட்டின் பின்புறம் ஒரு தொடை எலும்பு கிடப்பதைக் கண்டிருக்கிறார். அதில் பற்களின் அடையாளம் இருப்பதைக் கண்ட அவர் அவை நரி கடித்ததால் ஏற்பட்ட அடையாளம் இருக்கலாம் என்று கூறினார்.

அவரைப் போலவே வேறு சிலரும் தங்கள் வீடுகளின் அருகே உடல் பாகங்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்தனர். பொலிசாரும் தடயவியல் நிபுணர்களும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.