தடம்புரண்ட புகையிரதம் : புகையிரத சேவைகள் பாதிப்பு!!

567

 

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர தபால் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் பல்லேகம எனும் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் குறித்த புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து குறித்த புகையிரதத்தில் பயணித்த பயணிகளையும், கொண்டு செல்லப்பட்ட கடிதங்களையும் வேறொரு புகையிரதத்தில் மாற்றி அனுப்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புகையிரத பாதைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மலையக புகையிரத சேவைகள் பாதிப்பில்லாமல் தொடரும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.