வவுனியாவில் நுண்நிதி நிறுவனத்தின் தொல்லையினால் குடும்பப் பெண் தற்கொலை!

1117

வவுனியாவில் தவறான முடிவெடுத்து நஞ்சருந்திய குடும்பப் பெண்ணொருவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். நுண்நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்த இயலாத காரணத்தினாலேயே அவர் உயிரை மாய்த்தார் என அப் பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் சக்திவேல் சசிகலா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலைசெய்துள்ளார். கடந்த 23ம் திகதி இரவு 9 மணியளவில் தவறான முடிவெடுத்து தனது வீட்டில் நஞ்சருந்திய நிலையில் சகோதரனால் மீட்கப்பட்டு உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குறித்த பெண் கணவரைப் பிரிந்த நிலையில் அவரது தந்தையுடனேயே வசித்து வந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் அவரது தந்தை கருத்து தெரிவிக்கையில்,

“என்னுடன் வாழும் எனது மகளான சசிகலா நுண் நிதி நிறுவனங்களில் கடன்களைப் பெற்றார். தவணைப் பணத்தினை செலுத்த இயலாது திண்டாடினார். தவறான முடிவெடுத்த அன்றைய தினம் மாலை 5 மணியளவில் குறித்த நுண் நிதி நிறுவனத்தின் முகவர் தவணைப் பணம் கேட்டு வீட்டுக்கு வந்ததுடன் கடுமையான வார்த்தைகளினால் மகளினை திட்டியுமுள்ளார். இதன் காரணமாகவே எனது மகள் நஞ்சருந்தியுள்ளார். “என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.