இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணை : ஈபிடிபி ஜனாதிபதிக்கு கடிதம்!!

360

isaippiriyaaஇசைப்பிரியா படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை தேவை என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மகாநாட்டில் பங்கு கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ள வேளையில் சனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்லாமல் உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்புச் செய்துள்ளமை தமிழ் மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்ந்து போகச் செய்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுப்பியுள்ளது´ என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்´

தற்போது வெளியாகியிருக்கும் இசைப்பிரியா கைது செய்யப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பதான செய்திகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரும் கடிதத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படின் நீதியின் முன்னால் நிறுத்தப்படவேண்டும். அதுவே இறுதி யுத்தம் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை காண்பதாக அமையும் என்கிறார் டக்ளஸ்.

தமிழ் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் நியாயமும், பரிகாரங்களும் காணப்பட வேண்டும். ஆகவே எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கையை எடுத்து விரைவில் உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கின்றோம் என ஈபிடிபி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.