வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் ஆபத்தான குளவிகள் காணப்படுவதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். சுமார் 2000 மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் அண்மைக் காலமாக ஆபத்தான குளவிகள் கூடு கட்டி வருவதாகவும், அதனை தம்மால் அழிக்க முடியாதுள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
தற்போது 5 இடங்களில் இந்த குளவிகளின் கூடுகள் காணப்படுவதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால், பாடசாலைக்கு மாணவர்கள் வருகைத்தரும் பட்சத்தில் ஆபத்து நேர வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இக் குளவிக்கூடுகள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.






