வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக சேர்ந்து ஆட்சியமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசினோம். அவர் ஒத்துப்போக மறுத்து விட்டார். இதுவே சில சபைகளை கூட்டமைப்பு இழக்க காரணம் என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு கட்சிகள் ஆட்சி அமைந்திருக்கின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நடைபெற்ற தேர்தல் முறை வித்தியாசமான பல பாதிப்புக்களை ஏற்படுத்திய முறையாக இருந்தாலும் கூட, நாம் அரசியல் கட்சியாக இருந்தவர்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றதால் வவுனியா உட்பட வட மாகாணத்திலே தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலை வந்திருக்கின்றது.
வவுனியாவில் தேர்தல் முறையால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில் வவுனியாவில் 4 சபைகளிலும் மிகக்கூடிய ஆசனங்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.
உதாரணமாக வவுனியா நகரசபையில் 10 இல் 7வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று 8 ஆசனங்களை தனதாக்கி கொண்டது. வவுனியா தெற்கு பிரதேச சபையும் அதே போன்றுதான் 13 வட்டாரத்தில் 11 வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் காலப்பகுதியிலேயே பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டு வந்து வவுனியா வடக்கில் குடியேற்றினார்கள். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு மக்களில்லாத பகுதிகளுக்கு யானை வேலிகள் அமைத்து குடியேற்றவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றது.
வந்து குடியேறியவர்களின் கையில் வவுனியா வடக்கின் ஆட்சி போகவேண்டிய நிலை இருந்தது. தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 வட்டாரங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி 1 வட்டாரத்திலும் வெற்றி பெற்றது.
எமக்குள்ளே என்னதான் பிரிவு இருந்தாலும் தமிழ்பேசுகின்றவர்கள் என்ற வகையிலும் தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் என்ற வகையிலும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்ற வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக் கூட்டனி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய 3ம் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை காணப்பட்டது.
சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவைகள் பேசியிருந்தோம். கடைசிவரை ஒத்துப்போக முடியாதென்று கூறிவிட்டார். அவர் ஆம் என்றிருந்தால் 4 சபைகளும் எம்மிடம் இருந்திருக்கும். ஆனால் நகரசபையில் 10 வட்டாரங்களில் 07 வட்டாரங்களில் வெற்றிபெற்ற நாம் எதிர்க்கட்சியாக இருக்கின்றோம்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்காததன் விளைவே தேசிய கட்சிகள் ஆட்சியமைப்பதற்கும், அவர்களது ஆதரவுடன் ஆட்சி போனமைக்கும் காரணம் என்றார்.






