சொந்த அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி : அதிர்ச்சிக் காரணம்!!

1238

தமிழ்நாட்டில் சொந்த அண்ணனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் சரவணன் (27). இவர் தம்பி தங்கபாண்டியன் (25). சரவணன் சென்னை ராயபுரத்தில் உள்ள பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வந்த நிலையில் தங்கபாண்டியன் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கூலி வேலை செய்து வந்தார்.

சரவணன், தான் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்து மணவாளநகர் வரும்போது தாய் கவுரியிடம் கொடுப்பது வழக்கம். ஆனால், தங்கபாண்டியன் சம்பாதிக்கும் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வாராம்.

இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக செலவு செய்ய 1,000 ரூபாய் தருமாறு சரவணனிடம் தங்கபாண்டியன் கேட்டுள்ளார்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை என சரவணன் கூறிய நிலையில் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சரவணனின் மார்பில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் வலியால் அலறிய நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கபாண்டியனை கைது செய்த நிலையில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.