காங்கிரஸ் எம்.பி மன்னிப்பு கேட்டதால் பாலியல் புகாரை திரும்பப் பெற்றார் நடிகை சுவேதா மேனன்!!

399

swethaநடிகை சுவேதா மேனன், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. பீதாம்பர குரூப் மீது பாலியல் புகார் கூறினார். இதனைத்தொடர்ந்து கொல்லம் போலீசார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை சுவேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது கொல்லம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பீதாம்பர குரூப்(71) தன்னிடம் அத்துமீறி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சுவேதா மேனன் பரபரப்பு புகார் கூறினார்.

இதுபற்றி சுவேதா மேனன் கூறுகையில், விழாவில் கலந்து கொண்ட என்னிடம் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி அத்துமீறி நடந்து கொண்டார். என்னை தொட்டு தொட்டு பேசினார். அதை நான் தவிர்க்க முயன்றபோதும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி என் நிம்மதியை கெடுத்து விட்டார் என்றார்.

மேலும் தனக்கு பாலியல் சில்மிஷம் செய்த அரசியல்வாதி பற்றி தான் கொல்லம் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனக்கு வேதனை அளிப்பதாகவும் சுவேதா மேனன் கூறினார். நடிகை சுவேதா மேனனுக்கு நடந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாக மலையாள திரைப்பட துறையினரும் பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தினார்.

இதனைத்தொடர்ந்து நடிகை சுவேதா மேனனின் பாலியல் புகார் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் கொல்லம் உயர்அதிகாரிகளுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, கொல்லம் எம்.பி. பீதாம்பர குரூப் மீது கொல்லம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு பீதாம்பர குரூப் தன்னிடம் தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் மன்னிப்பு கேட்டதால் போலீசாரிடம் அளித்த புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாக சுவேதா மேனன் இ-மெயில் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த முடிவு எனது குரு, தந்தை மற்றும் கணவர் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர் எடுக்கப்பட்டது. எனது மனமாற்றத்தின் பின்னணியில் வேறெந்த நிர்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.