தெற்காசிய இளநிலைப் பரிவினருக்கான தடகளத் தொடர் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று சனிக் கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் வீரர்கள் இருவர் இடம்பிடித்தனர்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் சி.பிரகாஸ்ராஜ் தட்டு எறிதல் போட்டியிலும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியலாயத்தைச் சேர்ந்த கிந்துசன் 5 ஆயிரம், 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார்.
இந்நிலையில், 3ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இம்முறை இலங்கையிலிருந்து 84 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 44 வீரர்களும், 40 வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், நீண்ட இடைவெளியின் பிறகு இம்முறை 4 தமிழ் பேசுகின்ற வீரர்களும் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
5,000 மீற்றரில் வவுனியாவின் கிந்துஷன்
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஏனைய வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவநாதன் கிந்துஷன் 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன், அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியை 33 நிமிடங்களும் 56.87 செக்கன்களிலும்,
5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்களும் 56.10 செக்கன்களிலும் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, கனிஸ்ர மெய்வல்லுனர் போட்டித் தொடர் வரலாற்றில் முதற்தடவையாக நெடுந்தூர ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்துக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த முதல் வீரராக வரலாற்றில் இடம்பிடித்த கிந்துஷன்,
இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியனஷிpப் போட்டித் தொடரின் இறுதி நாளான மே மாதம் 6ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.
தட்டெறிதலில் ஹார்ட்லியின் பிரகாஷ்ராஜ்
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் உள்ளிட்ட எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ், 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் (39.73 மீற்றர்) புதிய போட்டி சாதனை படைத்த அவர்,
ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்டு, 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன்,
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான அடைவுமட்டத்தையும் பூர்த்தி செய்திருந்தார்.
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் யாழ். ஹார்ட்லி கல்லூரிக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவரும், 2013 முதல் அக்கல்லூரியின் எறிதல் நிகழ்ச்சிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவரான ஹரிஹரனின் பயிற்றுவிப்பின் கீழ் அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பெற்று வருகின்ற பிரகாஷ்ராஜ், எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தட்டெறிதல் போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளார்.
ஈட்டி எறிதலில் கிழக்கின் உதயவாணி
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலய மாணவி நாகேந்திரம் உதயவானி, 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார்.
அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட உதயவானி, 34.92 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் 4ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட உதயவானி,
முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தின் அனுபவமிக்க பயிற்சியாளரும், திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான எஸ். விஜயனீதன் மற்றும் 2007இல் கொழும்பில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கே.எம் ஹாரிஸின் வழிகாட்டலுடன் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த உதயவானி,
சர்வதேச அரங்கில் தனது முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை அணி சார்பாக போட்டியிடவுள்ளார்.
800 மீற்றரில் பதுளையின் அரவிந்தன்
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் சந்திரகுமார் அரவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அவர் குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 53.46 செக்கன்களில் நிறைவுசெய்து தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான ஆண்களுக்கான 800 மீற்றர் இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
மலையக விளையாட்டுத்துறையில் முன்னிலை பாடசாலையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி சார்பாக இவ்வாறு சர்வதேச மட்டப் போட்டியொன்றுக்குத் தெரிவாகிய முதல் வீரர் என்ற பெருமையையும் அரவிந்தன் பெற்றுக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டத்தில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அரவிந்தன்,
அன்று முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார்.
தேசிய மட்டத்தில் 800 மற்றும் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பெரும்பாலும் தென் பகுதி மற்றும் மத்திய மலைநாட்டு வீரர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
எனினும், கடந்த 3 வருடங்களாக டி.எஸ் விதானரகேவிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற அரவிந்தன், தன்னுடைய அயராத முயற்சி, பெற்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் பாடசாலையின் ஒத்துழைப்புடன் தன்னுடைய திறமைகளை தேசிய மட்டப் போட்டிகளில் வெளிக்காட்டி முதற்தடவையாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீரராக இம்முறை நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷpப் போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ளார்.










