இந்தியாவில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு படகில் தப்பி செல்ல முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக அங்கு வசித்த தமிழர்கள் பலர் இந்தியாவுக்கு தப்பி வந்த நிலையில் அவர்கள் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் மீண்டும் இலங்கைக்கு தப்பிசெல்ல முயற்சிகள் செய்து வருகின்றனர். அவர்களை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
இந்நிலையில், இலங்கையின் காங்கேசன் துறைமுகம் அருகே பாக் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துககுரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு படகை அவர்கள் சோதனையிட்ட போது அதில் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமல் பயணித்தது தெரியவந்தது. உடனே அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
படகில் பயணம் செய்த நான்கு குழந்தைகள் உட்பட 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை 19-ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







