வவுனியாவிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் கிந்துசனுக்கு வரவேற்பு!!

1727

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (06.05) நிறைவுக்கு வந்த 3வது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வவுனியாவைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

வடமாகாணத்திற்கும் வவுனியா மாவட்டத்திற்கும் வெண்கலப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்த வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர் சிவானந்தன் கிந்துசன் இன்று பிற்பகல் 1 மணியளவில் தனது சொந்த இடமான வவுனியா புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியதும் வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் அனைவராலும் மலர்மாலை அணித்து வரவேற்கப்பட்டுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கிந்துசன், கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளேன். இதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றேன்.

எனது இலட்சியம் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதே. எனக்கு பயிற்றுவித்த நவனீதன் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள். எமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு எமக்கு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார். அவருக்கு மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.

விளையாட்டு அமைச்சினால் எமது பயிற்றுவிப்பாளருக்கு எவ்விதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை. எமது வீரர்களுக்கு எமது பயிற்றுவிப்பாளர் இலவச சேவையினையே மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் அவருக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் இடத்தில் மேலும் பல வீரர்களை எமது மாவட்டத்தில் உருவாக்க முடியும் எனவும் நம்பவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.