தமிழ்நாட்டின் மதுரையில் பெற்ற மகனை அவரது தந்தையே கொன்று புதைத்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சௌபா என்ற சவுந்திரபாண்டியன், பிரபல எழுத்தாளரான இவரது மனைவி லதா பூரணம் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் நிலையில், இவர்களது மகன் விபின் இருவரிடமும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களாக தந்தையுடன் தங்கியிருந்த மகனை காணவில்லை என எஸ்.எஸ்.காலனி பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ம் திகதி லதா பூரணம் புகார் அளித்தார்.
சந்தேகத்தின் பேரின் சவுந்திரபாண்டியனிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பொலிசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், விலை உயர்ந்த காரை எனது மகனுக்கு பரிசாக வாங்கி கொடுத்தேன், போதைக்கு அடிமையானதால் விபின் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வான்.
ஒரே மகன் என்பதால் நானும் கொடுப்பேன், நான் வாங்கி கொடுத்த காரை என் அனுமதி இல்லாமல் விற்றுவிட்டான். இதுகுறித்து கேட்ட போது தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் கோபத்தில் சுத்தியலால் அடித்தேன், அவன் இறந்துவிட்டான்.
என்னசெய்வதென்று தெரியாமல், திண்டுக்கல் அருகே கொடை ரோட்டு பகுதியில் இருந்த எனக்கு சொந்த தோட்டத்துக்கு விபினின் உடலை எடுத்துச் சென்றேன்.
பள்ளப்பட்டி மூப்பர் தெருவைச் சேர்ந்த பூமி (40), நிலக்கோட்டை காமராஜ் நகரைச் சேர்ந்த கனிக்குமார் என்ற கணேசன் (42) ஆகிய இருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தோட்டத்தில் விபின் உடலை புதைத்து விட்டேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மூவரையும் அழைத்துச் சென்று விபினின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர்.





