பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர், மதுரை ஒத்தக்கடை யானை மலை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
3 மணி நேரம் கடுமையாக போராடி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த செங்குத்தான மலை மீது இவர்கள் ஏறியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அபாயகரமான மலை என்பதால் இவர்களின் பாதுகாப்பு குறித்து பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இந்த ஏழு வாலிபர்களும் மலை மீது ஏறி, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டுக்கு பிரதமரோ அல்லது இந்தியப் பிரதிநிதிகள் யாருமோ போகக் கூடாது என்று வலியுறுத்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.




