16 வயது சிறுவனை தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்திய நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணலிங்கம் பிரேம சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டாயிரம் ரூபாய் தண்டமும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்டயீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை பகுதியில் 65 வயதுடைய சிறிய தந்தையொருவர் 16 வயது மகனை கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 08ஆம் திகதி தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த தாக்குதல் தொடர்பில் சிறுவனின் சகோதரி மற்றும் பொலிஸ் விசாரணை அதிகாரி, சட்ட வைத்தியதிகாரி ஆகியோர் சாட்சியமளித்த நிலையில் எதிரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கொண்டு மேற்குறிப்பிட்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





