கூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா?

846


நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது.



ஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே சொல்கின்றோம். தாய் என்ற இந்த சொல்லை தாங்கி இரத்தமும், சதையுமாக நமக்கு கூலியின்றி வேலை செய்யும் அன்னைக்கு இவ்வுலகத்தில் எதுவும் ஈடாகாது.

ஈரைந்து மாதங்கள் எம்மை சுமந்து ஈன்றெடுத்த ஈடு இணையற்ற நம் தாய்க்கு பெருமை சேர்க்கும் உன்னத நாள் இன்று.



இன்றைய நாளை உங்கள் தாய்க்காக ஒதுக்குவீர்களா? இல்லை வேண்டாம். இந்த பரபரப்பான உலகில் ஒரு நிமிடத்தை மாத்திரமாவது உங்கள் உயிரன்னைக்காக ஒதுக்க முடியுமா?



தமது குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கள்ளமற்ற, எதிர்பார்ப்பற்ற அன்பு காட்டுவதே நமது அம்மா.


தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தாயின் மகத்துவத்துவத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவே அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் பல உள்ளன.


அந்த வகையில், வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் கொண்டாடிய போது அந்த கொண்டாட்டத்தில் தாய் தெய்வத்தை வணங்குவதையும் ஓர் அங்கமாக கொண்டிருந்தனர்.

அவர்கள் க்ரோனஸின் மனைவி, ரேஹாவை தாய் தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். அதே போன்று ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் போது தாய் தெய்வத்தை வணங்குவதையும் அவருக்கு மரியாதை செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இவ்வாறு பண்டைய வரலாற்றின் பின்னணியே அன்னையர் தினம் தோன்றுவதற்கு வித்திட்டது என கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஜார்விஸ் என்பவரேயாவார்.


இவர் அமெரிக்காவில் நடந்த யுத்தமொன்றில் பலியாகிய அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து அதற்காகாவே பாடுபட்டு 1904இல் உயிர்நீத்தார்.

இந்த நிலையில் இவரது மகளான அனா ஜார்விஸ் (Anna Jarvis) தனது தாயின் நினைவாக மே மாதத்தில் ஓர் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு வழிபாட்டினை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்.

அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ஆம் ஆண்டு முதல் தாய்மாரை கௌரவிப்பதற்கான தினத்தை அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

இருந்தும் இதில் திருப்தியடையாத அவர் அமெரிக்கா முழுவதும் இந்த அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இந்த கோரிக்கையின் நியாயத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த அன்றைய அமெரிக்காவின் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்றைய நாளை விடுமுறை தினமாகவும் அறிவித்தார்.

எமக்கு தூய்மையான அன்பை தரும் அன்னையர்களை மகிழ்விப்பதற்காகவும் அவர்களது மகத்துவத்தையும், பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தற்போது அன்னையர் தினம் பரவலாக உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனினும் அன்னையின் மகத்துவத்தை அறியாத பலரும் நம் மத்தியில் வாழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான சாட்சி தான் நம் நாட்டிலுள்ள முதியோர் இல்லங்கள்.

கருவிலிருந்தே தன் குழந்தைக்காக உணவு, உறையுள், உயிர் என அனைத்தையும் தியாகம் செய்து, தன் சேய் பூவுலகில் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கும் அன்னையை பலரும் ஒரு பொருளாகவே பார்க்கின்றார்கள்.

ஆம் நம் தேவை முடிந்ததும் தூக்கி போடும் பொருளாக.. இந்த நிலை நாளை நமக்கும் வரலாம் என்பதையும் மறந்து..

இந்த நிலையானது இன்றுடன் முடிவிற்கு வர வேண்டும் என்பதே எனது அவா. நம் முதல் காதலும், எம் மீது முடிவில்லா காதலை கொண்டவளும் அன்னையே.