வவுனியா மதீனா நகர் கிரமத்தில் நேற்று (13.05) கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் அல்மதீனா விளையாட்டு கழகம் என்பன இணைந்து டெங்கு மற்றும், பாத்தீனியத்தை ஒழிக்கும் நோக்கில் சிரமதானப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்பட்ட டெங்கு உற்பத்தியாகும் இடங்களில் கிராம மக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
நீர் வடிகான்கள் தண்ணீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடும் வகையில் துப்பரவு செய்யப்பட்டதுடன் வெற்றுக் காணிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த பற்றைகள், புற்கள், குப்பைகள், நீர் தேங்கி நிற்கக் கூடிய கொள் கலன்கள், டயர்கள் ஆகியன அகற்றப்பட்டு அவை தீயிட்டுக் எரிக்கப்பட்டன. அத்துடன் பெண்களும் தங்களது வீடுகளை டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகாத வண்ணம் துப்பரவு செய்தனர்.
குறித்த சிரமதானப் பணியில் கிராம உத்தியோகத்தர், சுகாதார பிரிவினர், குடும்பநல உத்தியோகத்தர், கிராம மக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.







