இலங்கை அணி அபார வெற்றி- அரை இறுதிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..

431

sanga
செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர்.

294 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு குஷால் பெரேரா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாட இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ஷன் 44 ஓட்டங்களையும் மகேள ஜெயவர்தன 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சங்ககார ஆட்டமிழக்காமல் 12 நான்கு ஓட்டங்கள் உட்பட 135 பந்துகளில் 134 ஓட்டங்களையும், குலசேகர 3 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உட்பட 38 பந்துகளில் 58 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் இலகுவான வெற்றியை உறுதிசெய்தனர்.

குமார் சங்ககார இன்றைய போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரை இறுதி போட்டிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..

~கேசா~