வவுனியாவில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எனக்கூறி ஒரு கோடிக்கும் மேல் மோசடி!!

390

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் இணைப்பாளர் என தெரிவித்து பொது மக்களை ஏமாற்றி சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் அளவில் சுமார் 110 000 ரூபாய் பெறுமதியுடைய குழாய் கிணற்றை மீள் குடியேற்ற அமைச்சின் மூலம் 45 000 ஆயிரம் ரூபாய்க்கு மின்சார நீர் இறைக்கும் பம்பி பொருத்தி தருவதாக தெரிவித்து வவுனியா செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட வாழவைத்த குளம், ஆண்டியா புளியங்குளம், புதுக்குளம், கணேசபுரம், சின்ன சிப்பிக்குளம் முதலியார்குளம், சூடுவெந்த புலவு, பாவற்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலுள்ள மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபரால் பணம் பெறப்பட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் நீர் பெறுவதற்காக நிலம் துளையிடப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மின்சார நீர் இறைக்கும் பம்மிகள் வழங்காது மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து நாம் இது தொடர்பில் அவ்வமைச்சிடம் வினவியபோது, இவ்வாறான எந்த செயற்திட்டத்தையும் தாம் செய்யவில்லை என்றும், வவுனியாவிற்கான இணைப்பாளராக கருணாதாச என்பவரே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர்.

மேலும் ஏதேனும் இவ்வாறான செயற்திட்டங்களை தாம் செயற்படுத்துவதாக இருந்தால் அங்குள்ள பிரதேச செயலங்களூடாக பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டே வழங்கப்படும் எனவும் வட மாகாணத்துக்கான மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கொஸ்தா தெரிவித்ததுடன், இது தொடர்பில் தாம் அமைச்சருடன் பேசி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களால் அங்குள்ள அரசியல்வாதிங்களிடம் நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தும் பயனில்லை என குறிப்பிட்டனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் செட்டிகுளம் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட குறித்த நபர் இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் அனைத்து மக்களுக்கும் நீர்ப்பம்பிகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். எனினும் இவ்வாறு பல காலக்கெடு வழங்கியும் அவர் தம்மை ஏமாற்றி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

எனவே இவ்வாறு செட்டிகுளம் பிரதேசத்தில் தமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நீரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாதிக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையல்லவா?