முள்ளிவாய்க்காலில் இன்று நிகழ்ந்த மனிதாபிமானம் : கண்ணீரில் நனைந்த உள்ளங்கள்!!

541

தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழர் தாயகப்பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்பட்ட தமிழின படுகொலையின் நினைவேந்தலில் மனதை உருக்கும் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்திருந்தன.

இரத்தம் தோய்ந்த இந்த நாளில் முள்ளிவாய்க்காலில் இப்படியும் ஒரு மனிதாபிமானமா? என எண்ணி கண்ணீர்வடிக்கும் வகையிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் இடம்பெற்றது.

தனது இன்னுயிர் உறவுகளை இழந்து கதறி அழும் தாய்மாரின் கண்ணீர் காண்போர் மனத்தில் துயரினை ஏற்படுத்தியிருந்தது. மேலும், முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்ட தாயொருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார் என உணர்ச்சிப்பொங்க தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிட்டபோது, எனது பிள்ளை, சுற்றத்தாரை இழந்து நான் தனித்துவிடப்பட்டுள்ளேன். எனக்கென்று ஒரு வீடு இல்லை, அரசியல்வாதிகள் வந்தார்கள் உங்களுக்கென்று ஒரு வீட்டுத்திட்டம் தருகின்றோம் என்று கூறினார்கள், வீட்டுத்திட்டமும் கிடைத்தது.

ஆனால் இந்த வீட்டுக்காக பெரும் கடன் பட்டுள்ளேன், வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் மாத்திரம் அமைச்சராவதற்கு முன்னர் எனது கடனை அடைக்க பணம் கொடுத்து உதவினார்.

ஆனால் எனது கடனை இன்னும் முழுமையாக என்னால் இன்னும் முழுமையாக அடைக்கமுடியவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அத்தருணத்தில் குறுக்கிட்ட ஒருவர் உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது அம்மா என்று கேள்வி எழுப்ப தான் இன்னும் வீட்டுத்திட்டத்திற்காக 15,000 ரூபா செலுத்த வேண்டும் என அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு குறித்த நபர், உங்களுடைய பிள்ளையாய் என்னை நினைத்து இந்த பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள் என 20,000 ரூபா பணத்தினை அந்த தருணத்திலேயே எடுத்துக்கொடுத்து உதவியுள்ளார்.

என்னை உங்களுடைய பிள்ளையாய் நினைத்துக்கொள்ளுங்கள் என அந்த நபர் கூறிய தருணம், நான் உங்கள் அனைவரையும் என்னுடைய பிள்ளையாய்தான் நினைக்கின்றேன் என அந்த தாய் தெரிவித்தமை அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், குறித்த நபரின் மனிதாபிமானம் அங்குள்ள மக்கள் அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-தமிழ்வின்-

https://www.youtube.com/watch?time_continue=272&v=mxbsUw18ksE