ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளராக வி.ஜனகன் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஒருமித்த முற்போக்கு முன்னணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய நல்லிணக்க சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நேற்று காலை ஜனகனுக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் மனோ கணேசன் வழங்கி வைத்தார். வரவிருக்கும் முக்கிய தேர்தல்களை குறிவைத்து கட்சியின் விரிவு படுத்தல் நடவடிக்கைளை நாம் ஆரம்பித்துள்ளோம்.
அதன் முதற் கட்டமாக தேசிய ரீதியிலும்இ சர்வதேச ரீதியிலும் கட்சியினை விரிவுபடுத்தும் பொறுப்பு ஜனகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற அடிப்படையிலேயே இவருக்கான வாய்ப்பினை நான் வழங்கியுள்ளேன்.
ஜனகன் கடந்த காலங்களிலும் பல சமூக வேலைத்திட்டங்களை தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை பூராகவுமுள்ள மக்களுக்கு செய்து வந்துள்ளார்.
அவரை எனது கடசிக்குள் உள்வாங்கி, கட்சியின் உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியினை விரிவாக்கல் செய்து, எமது மக்கள் சேவை நடவடிக்கைளை விரிவுபடுத்தவுள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வினையாகமூர்த்தி ஜனகன் IDM நேசன்ஸ் கம்பஸ் நிறுவனத்தின் தலைவராவார். இவர் கொழும்பு பலக்லைக்கழத்தில் முகாமைத்துவ சிறப்பு பட்டம் பெற்றவர். தனது மேற்படிப்பினை இங்கிலாந்தில் முகாமைத்துவம் மற்றும் சட்ட துறையில் பூர்த்தி செய்துள்ளார்.





