கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தாமதத்திற்காக அறவிடப்படும் தண்டப்பணம் நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது ஏற்படும் தாமதத்திற்காக அறவிடப்படும் தாமத தண்டப் பணம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது ஏற்படும் தாமதத்திற்காக அநீதியான முறையில் தண்டப்பணம் அறவிடப்படுவதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
தாமதத்திற்கான தண்டப்பணம் அறிவிடும் நடைமுறை கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பொதுமக்களின் முறைப்பாட்டுக்கு அமைய அனைத்து விதமான தண்டப்பண அறவீடுகளை நிறுத்துவதாக கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பணிப்புரையை கொழும்பு மாநகர ஆணையாளருக்கு மேயர் விடுத்துள்ளார்.
வாகன தரிப்பிட இயந்திரத்தில் பணம் செலுத்தாமைக்காக அறிவிப்படும் தண்டப் பணத்தில் 52 சதவீதமான தொகையை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமே ஈட்டிக்கொண்டதாக கொழும்பு நகர பிரதி ஆணையாளர் நிஹால் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெள்ளவத்தையில் தரிப்பிட இயந்திரத்திற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனத்திற்கு 30 ரூபாய் செலுத்த மறந்தமையினால் வாகனத்தின் உரிமையாளருக்கு 10120 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது





