நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் சிம்புவின் ரசிகர்கள் அவரை எப்போதுமே விட்டுக்கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களின் அபிமானம் பெற்றவராக இருக்கிறார் சிம்பு.
இந்நிலையில், சிம்புவின் செயல் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. அந்த விஷயத்தை நடிகர் விவேக்கும் பாராட்டியுள்ளார். சிம்பு ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் இறந்த தன் தீவிர ரசிகரும், ரசிகர் மன்ற நிர்வாகியுமான மதன் என்பவரின் 9ம் நாள் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தானே போஸ்டர் ஒட்டியுள்ளார் நடிகர் சிம்பு. இந்த புகைப்படம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த மதன் என்பவர் கடந்த 10-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு நடிகர் சிம்பு அன்றே இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த மதனுக்கு அவருடைய நண்பர்கள் நேற்று இரவு நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருந்தனர். நேற்று இரவு காரில் செல்லும்போது தற்செயலாக இதைப் பார்த்த சிம்பு, உடனே காரில் இருந்து இறங்கி வந்து மதன் நண்பர்களிடம் அந்த போஸ்டரை வாங்கி அவரே ஒட்டினார்.
சிம்புவே போஸ்டரை வாங்கி ஒட்டியதைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்று ரசிகர்கள் மேல் அன்பு வைத்திருக்கும் வேறொரு நடிகரைப் பார்க்கவே முடியாது என்று சமூக வலைதளங்களில் நெகிழ்ந்துபோய்ப் பாராட்டி வருகின்றனர்.