வாழைச்சேனையில் காதல் ஜோடியொன்றின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திகிலிவெட்டை கிராமத்தின் முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த தங்கவடிவேல் தினேஷ்குமார் மற்றும் நூலகர் வீதியைச் சேர்ந்த நாகராஜா நிரோஜினி ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோராவெளி – நாவலடி ஊற்று பகுதியில் நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிளொன்று அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்ததை நோட்டமிட்ட அந்தக் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருவர் பிரதேச சபை உறுப்பினருக்கு அழைப்பை ஏற்படுத்தி விபரத்தை தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச சபை உறுப்பினரும், கிராமவாசிகளும் ஆடு மேய்க்கும் பெண்ணுமாக இணைந்து பற்றைக் காடுகள் அடர்ந்த பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது இரு சடலங்கள் தூங்கில் தொங்கியபடி காணப்பட்டுள்ளன. சடலங்களாக மீட்கப்பட்ட இருவரும் காதலர்கள் எனவும், காதலி 5 மாத கர்ப்பிணி எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதற்காக தங்கள் பெற்றோரின் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத நிலையில் விரக்தியுற்று இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





