திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனைகளை மேற்கொள்வதற்கு சென்ற பொலிஸ் சார்ஐன் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கியதுடன் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று பெண்கள் உட்பட ஆணொருவரையும் இன்று காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 48, 28, மற்றும் 29, 39 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
ரொட்டவெவ பகுதியிலுள்ள குறித்த வீட்டில் கஞ்சா போதைப்பொருள் விற்கப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து,
அவ்வீட்டை சோதனை செய்து கஞ்சாவை மீட்ட போது அங்கு சென்ற பொலிஸ் சார்ஐன் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவரை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தாக்குதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இவர்களை கைது செய்துள்ளதாகவும் இன்னுமொரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.





