ஏமாற்றினார் சச்சின் : அறிமுகப் போட்டியிலேயே சர்மா அபாரம்!!

327

rohitகொல்கத்தாவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் அறிமுக வீரர் ரோஹித் சர்மா தனது முதலாவது சதத்தை பதிவுசெய்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தத் தொடருடன் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் விடைபெறுகிறார் என்பதால் அவரது இரசிகர்களிடையே இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தினம் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாது 78 வது ஓவர்களிலேயே, 234 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சாமூவேல் மாத்திரம் அரைச்சதம் கடந்து 65 ஓட்டங்களை விலாசினார். இந்திய அணியின் முஹமட் ஷமி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. குறிப்பாக தனது 199வது டெஸ்ட்போட்டியில் களமிறங்கியுள்ள சச்சின் 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்து இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையளித்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். இதன்படி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து, 354 ஓட்டங்களைப்பெற்று 120 ஓட்டங்களால் முன்னலையில் உள்ளது.

சர்மா 127 ஓட்டங்களை விலாசிய நிலையில் களத்தில் உள்ளார். இவர் இந்திய அணிக்காக ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் 92 ஓட்டங்களுடன் அஸ்வின் சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.