நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்து மீள்குடியேற்ற வசதிகள் கிடைக்காதோர் கிராமசேவகர் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என வடமாகாண உறுப்பினர் பா. சத்தியலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து கிடைத்துள்ளது.
எனவே இதுவரை அவ்வாறான வசதிகள் கிடைக்காதவர்கள் தங்கள் பகுதி கிராம சேவகரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் மா.ச.உறுப்பினரால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் தமது பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்காக விசேட செயலணியொன்று மீள்குடியேற்ற அமைச்சினால் கடந்த 2016ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டது.
இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு வசதியாக வீட்டுத்திட்டம், உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குவதே இந்த செயலணியின் நோக்கமாகும்.
எனினும் துரதிஸ்ரவசமாக இந்த செயலணியின் திட்டத்தில் இதுவரையில் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இதுதொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இம்மாதம் 16ம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன்.
இந்த சந்திப்பின்போது நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும் இத்திட்டத்தில் உள்வாங்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார்.
இதனடிப்படையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால் வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறுவுறுத்தல் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் முடிவுத்திகதி வரும் ஜூன் மாதம் 30ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றத்திற்கான வசதிகள் கிடைக்காதவர்கள் உங்கள் பகுதி கிராம சேவகர்களிடம் விண்ணப்படிவங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





