வவுனியாவில் கொட்டும் மழையிலும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

460

வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் கடந்த டிசம்பர் மாதத்துடன் இடமாற்றம் பெற்று சென்றிருந்தார். அதன் பின்னர் கடந்த ஐந்து மாதங்களாக இப்பாடசாலை அதிபர் இன்றியே இயங்கி வந்திருந்தது.

இதனால் அதிபர் இன்றியே இயங்கி வந்த நிலையில் பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டியின் போது வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இப்பாடசாலைக்கான அதிபர் இன்மை பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரினால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய வெகு விரைவில் அதிபரினை நியமிப்பதாக வவுனியா தெற்கு வலயக்கல்வ பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதும் இதுவரை இப்பாடசாலைக்கான அதிபரினை நியமிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையிலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாடசாலையினை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட நேரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலையினுள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதன் காரணமாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.