தங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது : நெகிழவைத்த பாசக்கார அண்ணன்!!

441

கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இறந்து போன தனது அன்பு தங்கையின் நினைவாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார்,

2004 ஆம் ஆண்டு சைதுல் லஷ்கரின் தங்கை மருஃபா, மார்புசளி தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கையின் சிகிச்சை செலவு மற்றும் மருந்து வாங்க முடியாமல் சைதுல் சிரமப்பட்டுள்ளார்.

இதன் விளைவாக, சைதுல் தனது தங்கையை இழந்தார். வறுமையின் காரணமாக தனது தங்கைக்கு மருந்து வாங்கிகொடுத்து அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லையே என சைதுல் கவலை கொண்டுள்ளார்.

தனது தங்கைக்கு ஏற்பட்ட நிலை இனி எந்த ஏழைக்கும் ஏற்படக்கூடாது, என்னைப்போன்று இனி எந்த அண்ணனும் தங்கையை இழந்துவிடக்கூடாது என்பதற்கு தான் ஒரு மருத்துவமனை கட்டி அதில் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என முடிவு செய்தார்.

தான் டாக்ஸி ஓட்டும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்துள்ளார், இதுதவிர தனது முயற்சியை நண்பர்களிடம் தெரிவித்து நிதி திரட்டியுள்ளார். இவ்வாறு கிடைத்த பணத்தின் மூலம், பருய்பூர் அருகின் புன்ரி கிராமத்தில் தனது தங்கை பெயரில் மருஃபா ஸ்ம்ரிதி என்ற மருத்துவமனையை கட்டியுள்ளார்.

சுமார், 12 ஆண்டுகள் இந்த மருத்துவமனையை கட்டுவதற்கு போராடியுள்ளார். 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அதில் எக்ஸ்ரே வசதி, ஈசிஜி என்று எல்லா முக்கிய வசதிகளுடன் இருக்கிறது. 286 நோயாளிகள் அங்கு சிகிச்சை பெறமுடியும். இதன் மூலம் 100 கிராமங்கள் பலனடைந்துள்ளது.

தற்போது, மருத்துவமனையில் 8 மருத்துவர்கள் இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். சைதுலின் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ ரேடியோ நிகழ்ச்சியில் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

இப்போது எனக்கு உதவிட பலர் உள்ளனர். அதனால் என் கனவை முழுவதும் அடைய இன்னும் முயற்சிக்க விரும்புகிறேன். மருத்துவமனை கட்டுவதோடு நிற்காமல் ஏழைகளுக்கு உதவ மேலும் பல நல்ல காரியம் செய்ய கனவை நோக்கி செல்லப்போகிறேன்,” என்கிறார் சைது.