வவுனியா – வைரவப்புளிங்குளம் சிறுவர் விளையாட்டுத்திடலை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து வவுனியா நகரசபை பொறுப்பேற்க வேண்டும் என்ற அக்கினிச்சிறகுகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நேற்று நடைபெற்ற நகரசபை கூட்டத்தில் வவுனியா நகரசபையினருக்கு குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனியாரினால் அபகரிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல்களை நகரசபையினரால் பொறுப்பேற்கப்பட வேண்டும் என்ற முடிவுகள் நகரசபை தலைவர், உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கினிச்சிறகுகள் அமைப்பின் தலைவர் செ.அரவிந்தன் அறிக்கை ஒன்றும் அனுப்பி வைத்துள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நகரசபை ஆளுகைக்குட்பட்ட நகரசபையின் பொறுப்பில் தனியாரினால் அபகரிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல்களை நகரசபையினால் நேற்று முதல் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வேப்பங்குளம், வைரவப்பளியங்குளம் பகுதிகளிலுள்ள விளையாட்டுத்திடல்கள் உட்பட சில விளையாட்டுத்திடல்கள் நகரசபையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுத்திடல்களுக்கான பெயர்ப்பலகைகள் நாட்டப்பட உள்ளதோடு இன்று முதல் நகரசபையில் விளையாட்டுத்திடலுக்குரிய வாடகைப்பணத்தினைச் செலுத்த முடியும்.
தமது அமைப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்காக நகரசபைத் தலைவர் நகரசபை உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.