திருமணம் முடிந்த அல்பம் கூட வரவில்லை : பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்!!

839

தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவனை பறிகொடுத்த வேதனையில் உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகியிருந்த நிலையில், அதில் திருமணமான மூன்று மாதங்களில் மணிராஜ் என்பவரும் பலியாகியுள்ளார்.

இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளதால், கணவனின் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த வேதனையில் உள்ளார்.

தூத்துக்குடி தாமோதர நகரில் காவல்குடியிருப்புக்கு எதிரே எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தவர் மணிராஜ்.

இவருக்கும் அனுஷியா என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 2 மாத கர்ப்பிணியான மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பியிருந்ததால், அடிக்கடி அங்கு சென்று பார்த்துவந்த மணிராஜ் கடந்த 22ம் திகதியும் மனைவியை பார்க்கச் சென்றபோது தான் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளார்.‌

மணிராஜின் திருமண அல்பமோ, திருமண வீடியோவோ கூட இன்னும் கைக்கு வராத நிலையில், மணிராஜ் இப்படி ஒரு கொடூர முடிவுக்கு ஆளாகிவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.